கயபுஸா – விண்கற்களை நோக்கி

நாம் தற்போது ரோசெட்டாவின் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், மனித இனத்திற்கே ஒரு மிகப்பெரிய மயில்கல் என சொல்லலாம். வானில் தெரியும் வால்வெள்ளியை ஆர்வமாக பார்த்த காலம் போய் தற்போது வால்வெள்ளியில் ஒரு விண்கலத்தை இறக்கும் அளவிற்கு நமது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது.

hayabusa_main_001

அதேபோல வான்கற்களை தேடிப்போய் அதனிலிருந்து மாதிரிகளை மீட்டுவரும் ஒரு திட்டமே கயபூஸா திட்டம். ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் டிசம்பர் 3 இல் அனுப்பப்பட்ட இந்த கயபுஸா2 விண்கலமானது “C” வகையை சேர்ந்த 1999 JU3 என்ற விண்கல்லை நோக்கி செல்கிறது.

கயபுஸா2 திட்டமானது ஆனது JAXA (ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்) வின் இரண்டாவது திட்டமாகும். 2003 இல் முதலாவது கயபுஸா வெற்றிகரமாகப் பயணித்து “s” வகையை சேர்ந்த இடோகவா என்ற விண்கல்லில் இருந்து மாதிரிகளை எடுத்து, மீண்டும் 2010 இல் பூமிக்கு திரும்பியது.

கயபூஸா திட்ட்டத்தின் நோக்கம் நமது சூரியத்தொகுதியின் ஆரம்பத்தைப் பற்றி படிப்பதாகும். விண்கல்லில், சூரியத்தொகுதியின் ஆரம்பம் பற்றி அப்படி என்னதான் செய்தி இருக்க முடியும்? பார்க்கலாம்.

நாம் இதுவரை பூமியைத்தவிர சந்திரனில் இருந்து மட்டுமே கல் மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்துள்ளோம். NASA வின் StarDust என்ற திட்டமும் 2006 இல் வயில்ட் 2 என்ற வால்வெள்ளியில் இருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டுவந்து சேர்த்தது. ஆனால் ஒரு விண்கல்லில் இருந்து முதல் முறையாக கயபூஸா திட்டமே பூமிக்கு மாதிரிகளை கொண்டு வந்தது.

விண்கற்கள் சூரியத்தொகுதி உருவாகிய காலப்பகுதியில், நமது கோள்களைப்போலவே, உருவாகிய விண்பொருட்களாகும், ஆனால் பாரிய கோள்களைப்போலவோ அல்லது சந்திரன்களைப்போல அல்லாமல் இவ் விண்கற்கள் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகும் போது எவ்வாறு இருந்ததோ அதே போலவே தற்போது இருக்கின்றன. பூமி, சந்திரன் போன்ற பாரிய விண்பொருட்களில் ஈர்ப்புவிசை, காலநிலை போன்றவற்றால் மாற்றங்கள் ஏற்படலாம், அனால் இந்த விண்கற்கள் இவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுவதில்லை, காரணம், அதனது சிறய அளவேயாகும்.

இவ்வாறு மற்றமடயாமல் இருப்பதனால், விண்கற்களை ஆராய்ச்சி செய்வது, நமது சூரியத்தொகுதி தொடங்கிய காலத்தில் இருந்த அமைப்பை துல்லியமாக ஆராய உதவும். இதுதான் கயபூஸாவின் நோக்கமும்.

பல்வேறுபட்ட தொழில்நுட்ப காரணங்களுக்காக கயபூஸா திட்டமானது மிக முக்கியமானது. கயபூஸா விண்கலம் உந்துகைசக்திக்கு அயன் இயந்திரத்தை (ion engine) பயன்படுத்துகிறது. அயன் இயந்திரமானது மிகவும் வினைத்திறனான ஒரு உந்துகை இயந்திரமாகும், இன்னும் பெரும்பாலும் ஆராய்ச்சிக் காலகட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் கோள்களுக்இடையிலான போக்குவரத்துக்கு பயன்படுத்த தக்க சரியான இயந்திரம் இதுதான் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கயபூசாவின் இன்னொரு திறமை தனது தானியங்கி வழிச்செல்லும் முறைமை, இது எந்தவித மனித இடைச்செயற்பாடும் இன்றி விண்கலத்தை அதன் இலக்கு நோக்கி செலுத்தவல்லது. இது ஒளியியல் கமராவை பயன்படுத்தி இயங்கும்.

கயபூஸா, கயபூஸா2 ஆகிய விண்கலங்கள் ஒரே மாதிரியான கருவிகளையும் அமைப்பையும் கொண்டது, ஆனால் கயபூஸா2 உருவாகும் பொது ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் சில கருவிகள் கயபூஸா2 இல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கயபூஸா2 “C” வகையை சார்ந்த விண்கல்லை நோக்கி தனது பணத்தை தொடங்கியுள்ளது. இது 2018 இன் நடுப்பகுதியில் விண்கல்லை அடைந்து, அதை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு சுற்றி, அதிலிருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு மீண்டும் பூமியைநோக்கி 2020 இன் கடைசியில் வந்தடையும்.

இந்த “C” வகை விண்கற்கள், “S” வகை விண்கற்களை விட அதிகளவான சேதனப்ப்பதார்த்தங்களை கொண்டுள்ளன, ஆகவே இதனை ஆய்வு செய்வது, நமது சூரியத்தொகுதியில் எவ்வாறு சேதனப்பொருட்கள் (organic materials) மற்றும் நீர் வந்தடைந்தன என்பதை உறுதிப்படுத்த உதவும்.

சிறி சரவணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *